திருப்பூரில் மாநகராட்சி சார்பில் தோண்டப்பட்ட சாலையில் குழிகளை மூடக்கோரி மதிமுகவினர் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர், கொங்கு மெயின் ரோடு சின்னச்சாமி அம்மாள் அரசுப் பள்ளி அருகே மாநகராட்சியால் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். ஆகவே, இந்தக் குழிகளை மூடக்கோரியும், அப்பகுதியில் சாலையை சீரமைக்கக்கோரி மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் சு.சிவபாலன் தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு விரைந்த மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் தோண்டப்பட்டுள்ள குழிகளை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதில், எம்எல்எஃப் மாவட்டச் செயலாளர் சம்பத்,பனியன் சங்க செயலாளர் மனோகரன், தொண்டரணி அமைப்பாளர் குமார், துணை அமைப்பாளர் திருப்பூர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து தடைப்பட்டது.