விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மதுரை தூத்துக்குடி நான்குவழிச் சாலையில் பொய்யாங்குளம் விலக்கு பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அருப்புக்கோட்டை அருகே பொய்யாங்குளம் விலக்கு பேருந்து நிறுத்தம் உள்ளது. இப்பகுதியருகே உள்ள கட்டங்குடி, பாளையம்பட்டி மற்றும் பொய்யாங்குளம் விவசாய நிலங்களில் பணிபுரிய வரும் தொழிலாளர்களும் மேலும் இங்கிருந்து அருப்புக்கோட்டை நகருக்குப் பல்வேறு அலுவல்கள் காரணமாகச் செல்வோரும் இப்பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து பேருந்தைப் பிடிக்கின்றனர்.
இதுதவிர இப்பகுதியில் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையம்,அரசு மாணவர் விடுதி மற்றும் மாவட்ட ஆசிரியர்கள் பயிற்சி நிறுவனம் ஆகிய கல்லூரிகளின் மாணவர்களும் இப்பேருந்து நிறுத்தத்தில்தான் காத்திருந்து பேருந்தைப் பிடிப்பது வாடிக்கை (கரோனா சுழலுக்கு முன்புவரை). ஆனால் இங்கு பயணிகள் நிழற்குடை வசதி தற்போதுவரை செய்துதரப்படவில்லை. இங்கு நிழல்தரும் மரங்கள்கூட இல்லாததால் மழை அல்லது வெயிலுக்கு ஒதுங்கக்கூட, காத்திருக்கும் பயணிகளுக்கு வசதி இல்லை.
நிழற்குடை அமைக்கக் கோரிக்கை எழுந்த நிலையில் பாளையம்பட்டி,பொய்யாங்குளம் ஆகிய கிராமங்களின் பொது எல்லைப்பகுதியில் இருப்பதால் இரு கிராம ஊராட்சிகளும் நிழற்குடை அமைப்பதைத் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. எனவே விவசாயத் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்களின் நலன்கருதி இப்úருந்து நிறுத்தத்தில் விரைவில் நிழற்குடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.