போடியில் ஞாயிறன்று தளர்வில்லா பொதுமுடக்கத்திலும் திருமண நிகழ்வுகளில் மக்கள் சமூக இடைவெளியின்றி பங்கேற்றனர்.
ஆகஸ்ட் மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் தளர்வில்லா பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் நான்காவது ஞாயிறன்று போடியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இறைச்சிக் கடைகள் வழக்கம்போல் காலையில் செயல்பட்டது. காமராஜர் சாலை, பெரியாண்டவர் நெடுஞ்சாலை, உத்தமபாளையம் சாலையில் வாகனங்கள் சென்று வந்தாலும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை சுபமுகூர்த்த நாளாக இருந்ததால், ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்ச்சிகள் திருமண மண்டபங்களில் நடைபெற்றது. வான வேடிக்கைகள், செண்டை மேளங்களுடன் நடைபெற்ற திருமண நிகழ்வுகளில் மக்கள் சமூக இடைவெளியின்றி பங்கேற்றனர். திருமண வீட்டார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தாலும் பொதுமக்கள் பலர் முகக்கவசம் அணியாமல் திருமணத்திற்கு வந்தனர்.
போடியில் அம்மா உணவகம், மருந்தகங்கள், பால் விற்பனை கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. திருமண நிகழ்வுகளுக்கு வந்த சிலர், பரிசு பொருள்கள் கிடைக்காமல் அலைந்தனர்.