பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
கரோனா பரவலினால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பொதுமுடக்கம் காரணமாக பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து, தமிழகத்தில் கரோனா பாதிப்பு முழுவதும் குறைந்தபிறகே பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருள்கள் வீடுகளுக்கேச் சென்று வழங்கப்படுகிறது. கடந்த மாதங்களில் வழங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும்வரை மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருள்கள் வழங்க அரசாணையை நீட்டித்துள்ளது தமிழக அரசு. அதன்படி, கரோனா பாதிப்பு குறைந்து பள்ளிகள் திறக்கப்படும்வரை மாணவர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்க அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, கரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க மதிய உணவுக்கு பதிலாக உலர் உணவுப்பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.