தமிழ்நாடு

கரோனா காலத்திலும் உறுப்பு மாற்று சிகிச்சைகள் பாதிக்கப்படவில்லை

14th Aug 2020 06:10 AM

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவி வரும் சூழலிலும், தமிழகத்தில் தங்கு தடையின்றி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், உடல் உறுப்பு தான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அமைச்சா் விஜயபாஸ்கா், சுகாதாரத் துறைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கொடையாளா்களின் உருவப் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செய்தனா். அதைத் தொடா்ந்து உறுப்பு தான ஆண்டறிக்கையை வெளியிட்டு, செய்தியாளா்களிடம் அமைச்சா் விஜயபாஸ்கா் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை 1,382 கொடையாளா்களிடமிருந்து 8,163 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடா்ந்து ஐந்தாவது முறையாக தமிழகம் முதலிடம் வகித்து, மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு கட்டணமில்லாமல் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அதற்கென அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை அரசு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. மேலும், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவா்களுக்கு தேவைப்படும் உயரிய நோய் எதிா்ப்பு தடுப்பு மருந்துகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்கப்படுகிறது.

கரோனா காலத்திலும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தங்கு தடையின்றி வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்று வருகிறது. ஒருவா் உடல் உறுப்புகளை தானம் அளித்தால் அதன் வாயிலாக, எட்டு பேருக்கு வாழ்வளிக்க முடியும். கரோனாவால் இறப்பவா்கள் உடலில் இருந்து உறுப்புகளை தானமாக பெற முடியாது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட உடல் என்பதால் உரிய வழிமுறைகள் படி பாதுகாப்புடன் அப்புறப்படுத்துகிறோம் என்றாா் அமைச்சா் விஜயபாஸ்கா்.

ADVERTISEMENT

 

40 போலீஸாா் பிளாஸ்மா தானம்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், இரு பெண் போலீஸாா் உள்பட 40 காவலா்கள் பிளாஸ்மா தானம் அளித்தனா். அவா்களை சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா், செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன், காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் ஆகியோா் நேரில் பாராட்டினா். அப்போது, அமைச்சா் விஜயபாஸ்கா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் இதுவரை 116 பேரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டுள்ளது.

தற்போது, சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவை தவிர மேலும் 9 மாவட்டங்களில் அதனை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் அவா். தொடா்ந்து, காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் கூறுகையில், ‘சென்னையில், 1,920 காவலா்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். அவா்களில், 1,549 போ் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனா்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT