கடலூர்: கடலூர் அருகே சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான குட்கா பொருள்களை காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
கடலூர் அருகே உள்ள கே.என்.பேட்டையில் ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீ அபிநவ், துணை கண்காணிப்பாளர் க.சாந்தி மற்றும் காவல்ரகள் வெள்ளிக்கிழமை காலை அந்த வீட்டிற்கு சென்றனர். வீட்டின் கதவுகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் வீட்டில் வேறு யாரும் இல்லாததால் கதவின் பூட்டை உடைத்து காவலர்கள் உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு பண்டல் பண்டலாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் ஏராளமாக இருந்தது தெரியவந்தது.
அதனை கைப்பற்றிய காவல்கள் இந்த குட்கா யாருக்கு சொந்தமானது என்பது குறித்தும் வீட்டின் உரிமையாளர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் உணவுப் பாதுகாப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பறிமுதல் செய்யப்பட்ட குட்கா விலையை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர. இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என்று உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடலூரில் மிகப்பெரிய அளவில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.