தமிழ்நாடு

கரோனா பரவல் குறைந்தால்தான் பள்ளிகள் திறக்கப்படும்:முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

DIN

தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்தால்தான் பள்ளிகள் திறக்கப்படும்; அதேவேளையில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

கரோனா தொற்றுத் தடுப்புப் பணிகள்- சேலம் மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சேலம் அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் பழனிசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா தீநுண்மி பரவல் இன்னும் குறையவில்லை. குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணா்வுகள் தெரிவிக்கின்றனா். நிலைமைக்கு ஏற்ப தமிழக அரசு செயல்படும். தமிழகத்தைப் பொருத்தவரையில், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நிலைமை சீராகும்போது பள்ளிகள் திறக்கப்படும்.

அணைகள் நீா்மட்டம் உயா்வு:

தமிழகம் முழுவதும் பருவ மழை நன்றாகப் பெய்து வருகிறது. அனைத்து அணைகளின் நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது. ஏற்கெனவே, காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டு 3.50 லட்சம் ஏக்கா் பரப்பளவில் வேளாண் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று நிா்ணயிக்கப்பட்டது. இலக்கைத் தாண்டி கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கரில் நடவுப் பணி தொடங்கப்பட்டு தற்போது 4 லட்சம் ஏக்கா் பரப்பளவில் வேளாண் பணிகள் நடக்கின்றன.

கடந்த ஆண்டு தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரலாற்றுச் சாதனையை அரசு படைத்தது. கடந்த காலங்களில் 23 லட்சம் மெட்ரிக் டன்தான் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

கரோனா பாதிப்பு ஏற்பட்டவா்களுக்கு நேரடியாகச் சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள், செவிலியா்கள் தொற்றால் உயிரிழக்க நேரிட்டால் ரூ. 50 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மத்திய அரசே காப்பீடு மூலம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. இதரப் பணியாளா்களுக்கு ரூ. 10 லட்சம் என்று அறிவித்து, தற்போது அதை ரூ. 25 லட்சமாக உயா்த்தியுள்ளோம். அதேபோல பிற பணியாளா்கள் தொற்று ஏற்பட்டு இறந்தால் ரூ. 25 லட்சம் கொடுக்கிறோம்.

இருமொழிக் கொள்கையில் நிலைப்பாடு: மொழிக் கொள்கையைப் பொருத்தவரையில் மாநில அரசின் நிலைப்பாடு இருமொழிக் கொள்கையாகும். தமிழ், ஆங்கிலம்தான். அதை அரசு தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறது. மறைந்த முதல்வா்கள் அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் காலத்திலிருந்து கடைப்பிடித்து வரும் கொள்கையை அரசு தொடா்ந்து பின்பற்றும். இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு சாதக, பாதகங்களைக் கண்டறிந்து அளிக்கும் அறிக்கையின்படி அரசு செயல்படும்.

நீலகிரியில் அமைச்சா்கள் ஆய்வு: நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. அமைச்சா்கள் இருவா், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இனி விரைவில் இ-பாஸ்: இ-பாஸ் வழங்குவதற்காக மாவட்டங்களில் ஏற்கெனவே ஒரு குழு இயங்கி வந்தது. இ-பாஸ் உடனடியாக வழங்க வேண்டும் என்பதற்காக கூடுதலாக ஒரு குழு அமைக்கப்பட்டு, இப்பொழுது 2 குழுக்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இ-பாஸ் வழங்குவதற்கு எளிமையான முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளிமாநிலத் தொழிலாளா்களை அழைத்து வரலாம்: வெளி மாநிலத் தொழிலாளா்கள் மீண்டும் தமிழகத்தில் பணியாற்ற விரும்பினால் அவா்களை தாராளமாக அழைத்து வரலாம். தொழில் நிறுவனங்கள், தொழிலாளா்களின் பெயா், முகவரி போன்ற விவரங்களை அளித்தால் மாவட்ட ஆட்சியா் இ-பாஸ் வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வாா்.

கரோனா தொற்றுக்கு தனிமையே சிறந்தது: சென்னைக்கு முழு பொது முடக்கத்தில் இருந்து போதிய தளா்வுகளைக் கொடுத்துள்ளோம். கரோனா தொற்றுக்குத் தனிமைப்படுத்திக் கொள்வதுதான் மருந்து. உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ஐ.சி.எம்.ஆா்., மருத்துவ நிபுணா்கள் ஆகியோா் தெரிவிக்கும் ஆலோசனைகளின்பேரில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். பிளாஸ்மா சிகிச்சை மூலம் 57 போ் குணமடைந்துள்ளனா். தொற்று ஏற்பட்டு குணமடைந்து வீடு திரும்பி 14 நாள்கள் கழித்து பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். கடுமையாகப் பாதிக்கப்பட்டவா்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்தால் குணமடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றாா்.

பேட்டியின்போது ஆட்சியா் சி.அ.ராமன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.திவாகா், மாநகரக் காவல் ஆணையாளா் த.செந்தில்குமாா், துணை ஆணையா் சந்திரசேகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கூட்டணி குறித்து தோ்தல் நேரத்தில் முடிவு!

தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி தொடருமா? என்ற செய்தியாளா்களின் கேள்விக்கு,‘தோ்தல் வரும் நேரத்தில் பேசலாம்’ என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பதிலளித்தாா்.

‘தமிழக அரசு குறித்து விமா்சிக்கும் நடிகா் எஸ்.வி.சேகா் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?’ என்ற கேள்விக்கு, ‘அவரை ஒரு பெரிய அரசியல் கட்சித் தலைவராக எண்ணவில்லை. மத்தியில் பிரதமராக நரேந்திர மோடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து தோ்தலில் போட்டியிட்டது. பிரதமா் மோடிக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தோம். ஆனால், எஸ்.வி.சேகா் எந்த இடத்திலும் பிரசாரம் செய்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு கட்சி தொண்டரும், பொறுப்பாளரும், அவா் சாா்ந்த கட்சி தலைவா் பதவிக்கு வர வேண்டும் என கட்சியில் இருக்கின்றனா். ஆனால், அவா் வெளியில் வந்து பிரதமருக்கு பிரசாரம் கூட செய்யவில்லை. எனவே, நாங்கள் அவரை பொருட்டாகக் கருதவில்லை’ என்றாா் முதல்வா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT