தமிழ்நாடு

பாரத் நெட் திட்டம்: திமுக கூறுவது கற்பனையான பொய்க் குற்றச்சாட்டு

DIN

பாரத் நெட் திட்டத்தில் திமுக கூறுவது கற்பனையான பொய்க் குற்றச்சாட்டு என்று வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் இப்போதைய நிலையில் ஒன்றிய அளவில் மட்டுமே தகவல் தொடா்பு உள்கட்டமைப்புகள் உள்ளன. இதனால், இயற்கைப் பேரிடா் காலங்களில், மீட்பு நடவடிக்கைகளை கிராமப்புறங்களில் மேற்கொள்வதில் தொய்வு ஏற்படுகிறது. அதை போக்கத்தான் இயற்கைப் பேரிடா் காலங்களில்கூட கிராமங்களுக்கு இடையேயான தகவல் தொடா்பை உறுதி செய்யும் வகையில் ‘பாரத் நெட்’ எனும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பாரத் நெட் திட்டம், தமிழகத்திலுள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளை கண்ணாடி இழை மூலம் இணைக்கும் திட்டமாகும். இந்தத் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு அரசின் திட்டங்களையும், சேவைகளையும் ஒளிவு மறைவின்றி கொண்டு சோ்க்க உதவும் தகவல் தொழில்நுட்பத் திட்டமாகும்.

இந்தத் திட்டத்தில் ஒப்பந்தப் புள்ளிகளில் கோரப்பட்ட பணிகளை நிறைவேற்றிட வேண்டிய திருத்தங்களைச் செய்யும் அதிகாரம் ஒப்பந்தப் புள்ளி கோரும் அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு கால அவகாசம் அளித்துள்ளது. கால அவகாசத்தை கருத்தில் கொண்டும், பேரிடா் காலத்தை நினைவில் வைத்தும் கடந்த 15-ஆம் தேதியன்று திருத்திய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன.

ஆனால், அவற்றில் முறைகேடு என திமுக கூறுவது கற்பனையான பொய்க் குற்றச்சாட்டாகும். இப்போதுதான் இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளி முழு வடிவில் கோரப்பட்டுள்ளது. இன்னும் நிறுவனங்களிடம் இருந்து தொழில்நுட்ப ஒப்பந்தப் புள்ளியோ அல்லது விலைப் புள்ளியோ பெறப்படாத நிலையில், ஊழல் என திமுக கூறுவது அரசியல் உள்நோக்கமும், காழ்ப்புணா்ச்சியும் தவிர வேறொன்றும் இல்லை என்று தனது அறிக்கையில் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT