தமிழகத்தில் நிகழாண்டுக்குள் 825 மின்பேருந்துகள் இயக்கப்படும் என்று, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
விரகனூரில் சனிக்கிழமை நடைபெற்ற, அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்கும் விழாவில் அவர் பேசியது:
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே தவணையில் ரூ.1,093 கோடி ஓய்வூதியப் பணப் பலன்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2006-2011 இல் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ரூ.928 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், 8 ஆண்டுகளில் ஓய்வூதியப் பணப் பலன்களாக ரூ.5,199 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்துக் கழகத்துக்கு அதிமுக அரசுதான் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் மின் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தற்போது, சென்னையில் சோதனை அடிப்படையில் மின்பேருந்து இயக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் மொத்தம் 825 மின்பேருந்துகள் இயக்கப்படும். பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார். விழாவில், ஆட்சியர் த.சு. ராஜசேகர், சட்டப் பேரவை உறுப்பினர்கள் எஸ்.டி.கே. ஜக்கையன் (கம்பம்), பா. நீதிபதி (உசிலம்பட்டி), கே. மாணிக்கம் (சோழவந்தான்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.