விளம்பரப் பலகை விவகாரத்தில் நடிகர் விஜய் கூறியுள்ள கருத்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
விளம்பரப் பலகை விவகாரத்தில் விஜய் தெரிவித்துள்ள கருத்து குறித்து கேட்கிறீர்கள். யாரைக் கைது செய்ய வேண்டுமோ அவரை விட்டுவிட்டு, அச்சிட்டவரை கைது செய்கின்றனர் என்று விஜய் கூறியிருப்பது வரவேற்க வேண்டியது.
என் தாய்மொழி மீது கை வைக்காத வரை அனைவரின் கருத்துகளையும் ஏற்கலாம். தாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்கக் கூடாது. பொதுவான மொழியாக ஆங்கிலம் உள்ளது.
விபத்தின் மூலம் கிடைத்த மொழியாக ஆங்கிலம் இருந்தாலும், நன்மையாக அமைந்துள்ளது. 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தக் கூடாது என்றார்.
மெட்ரோ ரயிலில் பயணம்: வங்கத்தில் நக்சல்பாரி இயக்கங்கள் அதிகம் உள்ள பகுதியில் ஜங்கல்மெகல் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் அந்தப் பகுதியைவிட்டே செல்ல முடியாதவர்களாக இருந்தார்கள்.
அவர்களில் 20 பேரை தன்னார்வலர் குழுக்கள் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். அந்த வகையில் சென்னை வந்து ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனையும் சந்தித்தனர்.
பின்னர் அந்தச் சிறுவர்களோடு கமல்ஹாசன் தேனாம்பேட்டையிலிருந்து சென்னை விமான நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்தார்.
விளம்பரப் பலகையால் ஏற்படும் அலட்சிய மரணங்கள் குறித்து விடியோ ஒன்றையும் கமல் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.