சிக்கலான விஷயத்துக்குக்கூட சுலபமாக தீர்வு கண்டவர் ஜி.நாராயணசுவாமி . இவரை போல நாம் உயர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக புத்தகம் வெளியிட வேண்டும் என்று துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கூறினார்.
புகழ்பெற்ற பட்டயக் கணக்காளரும், ராஜாஜி பொதுநல மையத்தின் தலைவருமான ஜி.நாராயணசுவாமி (91) ஆகஸ்ட் 21-ஆம் தேதி காலமானார். எல்லோராலும் போற்றக்கூடிய மனிதராக வாழ்ந்தவர். அவருக்கு நினைவஞ்சலி மற்றும் இரங்கல் கூட்டம் சென்னை மயிலாப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பங்கேற்று நாராயணசுவாமிக்கு புகழஞ்சலி செலுத்திப் பேசியது: அகில இந்திய அளவில் பட்டயக் கணக்காளர் சங்கத்தில் உயர்ந்த அளவுக்கு மதிக்கப்பட்டவர் ஜி.நாராயணசுவாமி. 1975-ஆம் ஆண்டில் அவசரநிலை காலத்தில் அவருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. எந்தப் பட்டயக் கணக்காளரிடமும் இல்லாத அசாத்தியமான தைரியத்தை அவரிடம் பார்த்தேன். அவசர நிலை காலத்தில் அரசை எதிர்த்துப் போராடியவர்களுக்கு அவர் உதவிகள் செய்தார்.
தனது தொழில் சார்ந்தவர்களுக்கு உண்மையாக சேவை புரிந்தார். அவர் எவ்வளவு நல்ல காரியம் செய்தாலும், வெளியில் யாரிடமும் கூறாமல், விளம்பரப்படுத்தாமல் செய்வார்.
ஒரு பெரிய மனிதர் மறைந்த பிறகுதான் சமூகத்தில் எந்த அளவு இடைவெளி வருகிறது என்பது தெரிகிறது. பெரிய மனிதர் மறையும்போது அவர் போன்று மனிதர்கள் உருவாகவில்லை என்றால், சமுதாயத்தில் ஒரு தாழ்வு ஏற்பட்டு விடும்.
சிக்கலான விஷயத்துக்குக்கூட சுலபமாகத் தீர்வு கண்டவர் ஜி.நாராயணசுவாமி. இது எல்லோருக்கும் தெரியவேண்டும். இவரைப்போல நாம் உயர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக புத்தகம் வெளியிட வேண்டும். அவரது முக்கிய குணமே யாரையும் எதிரியாகக் கருதியது கிடையாது. மற்றவர்களும் அவரை எதிரியாக சொல்ல முடியாத அளவுக்கு அவர் வாழ்க்கை அமைந்ததுதான் முக்கியமானது என்றார் குருமூர்த்தி.
நிகழ்ச்சியில், பொற்றாமரை தலைவரும், பா.ஜ.க. மூத்தத் தலைவருமான இல.கணேசன், மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.நடராஜ், ராஜாஜி பொதுநல மைய அறங்காவலர் பி.எஸ்.ராகவன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கே.வி.எஸ். கோபாலகிருஷ்ணன், வருமான வரித்துறை முன்னாள் உயரதிகாரி எஸ்.ராஜரத்தினம், கணக்காளர்கள் சங்க முன்னாள் தலைவர் ஜி.வி.ராமன், ஹிந்துஸ்தான் வர்த்தக சபை தலைவர் பி.ஜி.சத்குருதாஸ், பட்டயக் கணக்காளர் ஜி.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டு ஜி. நாராயணசுவாமிக்கு புகழஞ்சலி செலுத்தினர்.