பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகை: மாமல்லபுரத்தில் மத்திய பாதுகாப்புத் துறையினர் ஆய்வு

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வரும் அக்டோபர் 11-இல் மாமல்லபுரத்துக்கு வருகை தருவதை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்புத் துறையினர்  மேற்கொண்டுள்ளனர். 
மாமல்லபுரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதைப் பார்வையிடும் மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.
மாமல்லபுரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதைப் பார்வையிடும் மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.


பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வரும் அக்டோபர் 11-இல் மாமல்லபுரத்துக்கு வருகை தருவதை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்புத் துறையினர்  மேற்கொண்டுள்ளனர். 
சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வரும் அக்டோபர் 11-ஆம் தேதி 3 நாள் பயணமாக வருகை தரவிருக்கின்றனர்.  
இங்குள்ள கடற்கரைக் கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், ஆதிவராக மண்டபம், கோவர்த்தன மண்டபம்  உள்ளிட்ட புராதனச் சின்னங்களை அவர்கள் சுற்றிப் பார்க்க உள்ளனர். இதையடுத்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க இருநாடுகளுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
இதனால், மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய தொல்லியல்  துறை பராமரிப்பில்  உள்ள பாரம்பரியச் சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளில் சமூக விரோதிகள்நுழையாத வண்ணம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாமல்லபுரத்துக்கு வியாழக்கிழமை வந்தனர்.
அவர்கள், மாமல்லபுரத்தில்  முக்கிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் ஈடுபட்டிருப்பதைப் பார்வையிட்டனர்.  இதைத் தொடர்ந்து, மாமல்லபுரம் நகரம் பாதுகாப்புப் படை வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.   
சந்தேகத்துக்குரிய நபர்கள் குறித்து எச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகளின் அடையாள அட்டையை சரி பார்த்த பிறகே அவர்கள் சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். மாமல்லபுரம் நுழைவாயில் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின்  வாகனங்களும் கண்காணிக்கப்பட்டு, வாகனங்களின் பதிவு எண்களை போலீஸார் சோதனை செய்த பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com