மாணவர் நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் சென்னைப் பல்கலைக்கழகம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் முதுநிலை மாணவர் கிருபாமோகன் தாக்கல் செய்த மனுவில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்பை முடித்தேன். பின்னர், புத்த கொள்கை முதுநிலை தத்துவவியல் படிப்பில் சேர்ந்தேன்.
இந்தப் படிப்பில் சேர்வதற்காக உரிய கட்டணம் செலுத்தி சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர், எனது சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்க பல்கலைக்கழகத் துணைவேந்தர் மறுத்துவிட்டார்.
நான் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தில் உறுப்பினராக இருந்ததால், பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டதாக, துணைவேந்தர் தெரிவித்துள்ளார். இது சட்டவிரோதமானது. எனவே என்னை நீக்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக சென்னைப் பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.