சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 22 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழகப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் வட மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூரில் 22 செ.மீ. மழையும், பூண்டியில் 21 செ.மீ. மழையும், அரக்கோணத்தில் 17 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
மேலும், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.
தமிழகத்தில் கனமழையைப் பொருத்தவரை திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை இடைவெளியுடன் கூடிய மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை, மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.