சங்கரன்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கென தனி அதிகாரி ஒருவரை நியமித்து அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
தென்காசி தனி மாவட்டம் அறிவிக்கப்பட்டது முதலே சங்கரன்கோவில் பகுதி மக்கள், தங்களது பகுதியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டத்தை உருவாக்க வேண்டும் அல்லது சங்கரன்கோவிலைத் தலைநகராகக் கொண்டு தென்காசி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று சங்கரன்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு சிவகிரி, திருவேங்கடம் உள்ளிட்ட தாலுகாக்களைக் கொண்டு புதிய மாவட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடைகள், காய்கறிச் சந்தைகள் எதுவும் இயங்கவில்லை. சுமார் ஆயிரகணக்கான விசைத்தறிக்கூடங்கள் செயல்படவில்லை.
மேலும், போராட்டத்தின் ஒரு பகுதியாக, சங்கர நாராயணர் கோவிலில் இருந்து தாசில்தார் அலுவலகம் வரை மாபெரும் பேரணியும் நடைபெற்றது.
சங்கரன்கோவில் தனி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது. முன்னதாக, சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலக்ஷ்மியிடம் இதுதொடர்பான கோரிக்கை மனுவையும் அளித்தனர்.