பூரண மதுவிலக்கு கோரி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரிஅனந்தன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டார்.
மகாத்மா காந்தியின்150-ஆவது பிறந்தநாளை மதுவில்லாத தமிழகத்தில் கொண்டாட மாநில அரசு வழிவகுக்க வேண்டும் என்று அப்போது அவர் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட குமரி அனந்தனுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
குறிப்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தென்னிந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களும், நிர்வாகிகளும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
முன்னதாக, உண்ணாவிரதப் போராட்டத்தின்போது குமரி அனந்தன் கூறியதாவது: மதுவில்லாத தேசமாக இந்தியா உருவெடுக்க வேண்டும். குறிப்பாக, தமிழகத்தில் மது என்ற சொல்கூட இல்லாத நிலை ஏற்பட வேண்டும். மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தின ஆண்டு நிறைவடைவதற்குள் அந்த நிலையை நாம் எட்ட வேண்டும்.அண்ணாவின் பெயரைத் தாங்கி ஆட்சி செய்து கொண்டிருக்கும் அதிமுக அரசு, மதுவிலக்கு குறித்த அரசாணையை பிறப்பிக்க வேண்டும். அந்த முடிவை அதிமுக அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அதேபோன்று மத்தியிலே ஆட்சி செய்யும் பாஜக அரசும், நாடு தழுவிய மதுவிலக்கு கொள்கையை வகுக்க வேண்டும். அப்படி செய்தால், கட்சி பேதமின்றி பல தரப்பினரும் பாஜகவை ஆதரிப்பார்கள். பூரண மதுவிலக்கு என்ற நிலை எட்டப்படும் வரை எனது போராட்டம் ஓயாது என்றார் குமரி அனந்தன்.