சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் திங்கள்கிழமை (செப். 16) முதல் காலைவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
இது குறித்து டிரைலர் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தரப்பில் கூறியது: மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் படி ஒவ்வொரு லாரிக்கும் குறிப்பிட்ட எடைகொண்ட பாரத்தை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது விதியாகும்.
இதனை மீறும் வாகன உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். ஆனால், இந்தக் கட்டுப்பாடு பல ஆண்டுகளாக முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அதிக பாரம் ஏற்றுவதால் சாலைகள் எளிதில் சேதமடைகின்றன, விபத்துகள் அதிகரிக்கின்றன, அதிக அளவு புகையை வெளியேற்றுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட எடை கொண்ட பாரம் மட்டுமே ஏற்றிச் செல்வது, ஒரு லாரியில் ஒரு கண்டெய்னரை மட்டுமே ஏற்றுவது என்ற முடிவோடு அதற்குரிய வாடகையை உயர்த்தித் தர வேண்டும் என்று கோரியிருந்தோம். இல்லையெனில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அறிவித்திருந்தோம்.
ஆனால், இன்றுவரை துறைமுக நிர்வாகங்கள், சரக்குப் பெட்டக முனையங்கள், சரக்குப் பெட்டக நிலையங்கள் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மேலும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தக் கூட அழைக்கவில்லை.
எனவே வேறு வழியின்றி திங்கள்கிழமை முதல் சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி அதானி ஆகிய துறைமுகங்களுக்கு எங்களது கண்டெய்னர் லாரிகளை இயக்க மாட்டோம். இதில் 12 சங்கங்களைச் சேர்ந்த கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் பங்கேற்கின்றனர் என தெரிவிக்கின்றனர்.
கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடித்தால் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் அடியோடு ஸ்தம்பிக்கும் அபாயம் உள்ளது.