தவறான சிகிச்சை காரணமாகவே தனது குழந்தை இறந்ததாகக் கூறி, மருத்துவர்களிடம் குழந்தையின் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை புழல் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு லோகேஷ். இவரது மூன்று வயது மகன் சந்தோஷ், காய்ச்சல் மற்றும் நெஞ்சு சளி காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சை அளிப்பதற்காக குழந்தைக்கு மாத்திரைகளும், ஊசி வாயிலாக மருந்துகளும் செலுத்தப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், மருந்து ஒவ்வாமை காரணமாக வெள்ளிக்கிழமை மாலை குழந்தை திடீரென மயங்கியதாக கூறப்படுகிறது.
உடனடியாக குழந்தைக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிகிச்சை பயனளிக்காமல் குழந்தை உயிரிழந்தது. தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் குழந்தை உயிரிழந்தாகக் கூறி, குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த எழும்பூர் போலீஸார், உறவினர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, மருத்துவர்கள் கூறியதாவது: யாருக்கு எவ்வகை மருந்து கொடுக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே அறிவது இயலாத காரியம். எனவே, மருந்து ஒவ்வாமை என்பது அனைவருக்கும் வரக்கூடிய பிரச்னை. சிலருக்கு உடலில் தடிப்பு, வாந்தி, மயக்கம் ஏற்படும். சிலருக்கு நாள்கணக்கில் வேறு சில எதிர்வினைகளை உருவாக்கும். சில நேரங்களில் தீவிரமாகும்போது உடலில் ரத்த ஓட்டமும், ஆக்ஸிஜன் சுழற்சியும் தடைப்பட நேரிடும்.
இதனால் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த குழந்தைக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், குழந்தையின் இறப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.