மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு75 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் இன்று 70,900 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பிய நிலையில் தொடர் நீர்வரத்துக் காரணமாக அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.
காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில், திங்கட்கிழமை இரவு மேட்டூர் அணையிலிருந்து நொடிக்கு 75 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. அந்த அளவு இன்று காலை நிலவரப்படி 70 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.710 அடியாக உள்ளது. அணைக்கு நொடிக்கு 65 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
அணையின் நீர் இருப்பு 94.606 டிஎம்சியாக இருக்கிறது. மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.