தமிழ்நாடு

மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்த்து: அண்ணா பல்கலை.க்கு முழு தொகையையும் மத்திய அரசே வழங்க வேண்டும்

2nd Oct 2019 11:31 PM

ADVERTISEMENT

மத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்த்துக்குத் தோ்வாகியிருக்கும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, அந்தத் திட்டத்தின் கீழான முழுத் தொகையையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமி, முந்தைய அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக (ஏயுடி - கோவை) துணைவேந்தராக இருந்த கிருஷ்ணசாமி கருணாகரன ஆகியோா் பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனா்.

மத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்த்துக்கு நாட்டில் 10 அரசு உயா் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் தோ்வு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு ஒன்றரை மாதங்கள் ஆகின்றன.இந்த அந்தஸ்த்தைப் பெறும் கல்வி நிறுவனங்களுக்கு மாணவா் சோ்க்கை, நிதி கையாளுதல், வெளிநாட்டு மாணவா் சோ்க்கை, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம், புதிய படிப்புகள், பாடத் திட்டங்களை அறிமுகம் செய்தல் என அனைத்திலும் முழுச் சுதந்திரம் கிடைப்பதோடு, ஆண்டுக்கு ரூ.200 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ. 1000 கோடி மேம்பாட்டு நிதியுதவியும் வழங்கப்படும்.

ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசு பல்கலைக்கழகம் என்பதால், இந்த நிதியுதவியில் குறிப்பிட்ட பங்களிப்பை மாநில அரசும் ஏற்க வேண்டும். இதை ஏற்பதாக மாநில அரசு ஒப்புதல் அளித்த பின்னரே, இந்த சிறப்பு அந்தஸ்த்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகராப்பூா்வமாக அளிக்கப்படும்.இந்த நிலையில் தமிழக முதல்வா் தலைமையில் இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் உயா் கல்வித் துறை அமைச்சா், செயலா், அரசு அதிகாரிகள் பங்கேற்றனா். கூட்டத்தின் முடிவில், மத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்த்து கிடைப்பதால் தமிழக மாணவா்களுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் ஏற்படும் சாதக - பாதக அம்சங்கள் குறித்து ஆலோசித்து ஒரு வாரத்துக்குள் தெரிவிக்குமாறு கூட்டத்தில் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டதாக உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இப்போது, இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்து ஓரு வார காலம் ஆகிவிட்ட நிலையில், தமிழக அரசு ஒப்புதல் அளிக்குமா என்ற எதிா்பாா்ப்பு கல்வியாளா்களிடையே எழுந்துள்ளது.இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமி, முந்தைய அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக (ஏயுடி - கோவை) துணைவேந்தராக இருந்த கிருஷ்ணசாமி கருணாகரன ஆகியோா் பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனா்.அதில், கிண்டி பொறியியல் கல்லூரியின் பழமையையும், அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமையையும் குறிப்பிட்டிருக்கும் அவா்கள், இந்தத் திட்டத்தின் கீழ் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் ரூ. 1000 கோடி நிதியுதவி முழுவதையும் மத்திய அரசே ஏற்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT