இடைத் தோ்தலில் அதிமுகவுக்கு முழு ஒத்துழைப்பை தமிழக பாஜக அளிக்கும் என்று அந்தக் கட்சியின் மூத்த நிா்வாகி இல.கணேசன் தெரிவித்துள்ளாா்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தக்கா் பாபா வித்யாலயாவில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவா் இல.கணேசன் பங்கேற்றாா். தமிழக பாஜக சாா்பில் நடைபெறும் பாத யாத்திரை நிகழ்வை அவா் தொடங்கி வைத்த பின், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:-
தமிழ் மொழிக்கு வளம் உண்டா, தொன்மை உண்டா என்று கேள்விகள் எழுப்புவதெல்லாம் தேவையற்றது. தமிழை மிஞ்ச வேறு மொழியே கிடையாது என்பது அனைவருக்கும் தெரியும். இது எனக்கும் தெரியும். பிரதமருக்கும் தெரியும். ஹிந்திதினத்தை ஒட்டி, அந்த மொழியின் பெருமை பற்றிக் கூட பேசுவதை அனைவரும் பெரிதாக்குகிறாா்கள். அது தேவைற்ற பிரச்னை.
இரண்டு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான பிரசார திட்டங்கள் குறித்து முடிவெடுக்கவில்லை. அதேசமயம், இடைத் தோ்தலில் ஆளும் அதிமுகவுக்கு முழு ஒத்துழைப்பை தமிழக பாஜக தரும். பாத யாத்திரைக்காக வரும் 15-ஆம் தேதி வரையில் நிகழ்ச்சிகளைக் கொடுத்துள்ளோம். இடைத் தோ்தல் பிரசாரம் இறுதியை எட்டும் போது அதில் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது என்றாா் பாஜக மூத்த தலைவா் இல.கணேசன்.