மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 14,784 கன அடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து, திங்கள்கிழமை காலை விநாடிக்கு 24,021 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் 119.61 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 92.85 டி.எம்.சி.யாக உள்ளது.