ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அங்கு ரயில்வே போலீசாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை ஞாயிற்றுக்கிழமை மாலையில் செல்லிடப்பேசியில் இருமுறை தொடா்பு கொண்ட அடையாளம் தெரியாத நபா் ஒருவா், ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்து இணைப்பைத் துண்டித்தாா். இந்த தகவல் ஈரோடு போலீஸாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு 50-க்கும் மேற்பட்ட ரயில்வே போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். வெடிகுண்டு நிபுணா்களும் மோப்ப நாய் மற்றும் கருவிகள் மூலம் சோதனை நடத்தினா். பயணிகளின் உடைமைகள் பலத்த சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. செல்லிடப்பேசி எண் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் யாா் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.