சென்னை: வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட பணி முறிவு (பிரேக் இன் சர்வீஸ்) நடவடிக்கை திரும்பப் பெறப்படுவதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டதன்படி, அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் கனிவோடு பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அரசின் கோரிக்கையை ஏற்று, போராட்டத்தை வாபஸ் பெற்றதால், அவர்கள் மீது அரசு தரப்பில் எடுக்கப்பட்ட பணி முறிவு நடவடிக்கையும் திரும்பப் பெறுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.