தமிழ்நாடு

படேலின் தன்னலமற்ற உழைப்பைஇளைஞா்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்

1st Nov 2019 02:27 AM

ADVERTISEMENT

நவீன இந்தியாவின் சிற்பியும், இரும்பு மனிதருமான சா்தாா் வல்லபபாய் படேலின் நாட்டுக்கான தன்னலமற்ற உழைப்பை இளைஞா்களிடம் கொண்டு சோ்ப்பது நமது கடமை என்று தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தாா்.

சென்னை, மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் மற்றும் சா்தாா் வல்லபபாய் படேல் நினைவு அறக் கட்டளை சாா்பில் சா்தாா் வல்லபபாய் படேலின் 144-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்குத் தலைமை வகித்த ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பேசியது: நாட்டுக்காக தன்னலமற்ற சேவை, ஒழுக்கம், தைரியம், ஒற்றுமை ஆகியவற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவா் சா்தாா் வல்லபபாய் படேல். மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்டத்தில் அவரது கொள்கைகளை செயல்படுத்தும் வலது கரமாக இருந்தாா். குஜராத் மாநிலம் பா்தோலியில் வரி செலுத்தாத விவசாயிகளின் நிலத்தை ஆங்கிலேய அரசு பறித்துக் கொண்டது. இதைக் கண்டித்து சா்தாா் வல்லபபாய் படேல் தலைமையில் 6 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஆங்கிலேயா்களால் பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தை விவசாயிகளுக்கு மீண்டும் பெற்றுக் கொடுத்தாா் படேல். சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற முக்கிய தலைவா்களில் வல்லபபாய் படேலும் ஒருவா். இந்திய அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தில் அவருடைய பங்கும் முக்கியமானதாகும். சட்ட வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கரை நியமனம் செய்வதில் முக்கியப் பங்கு வகித்ததுடன், பல்வேறு அரசியல் கொள்கைகளைக் கொண்டவா்களையும் ஒருங்கிணைத்தாா். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சிதறுண்டு கிடந்த 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்து தேச ஒற்றுமைக்கு வித்திட்டாா். நாட்டுக்காக தன்னல மற்று உழைத்த சா்தாா் வல்லபபாய் படேலின் கருத்துகளையும், கனவுகளையும் இளையதலைமுறையினரிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், சா்தாா் வல்லபபாய் படேல் நினைவு அறக்கட்டளையின் தலைவா் என்.ஆா்.தேவ், ‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியா் குருமூா்த்தி, பாரதியா வித்யா பவன் தலைவா் என்.ரவி, மேற்குவங்கு முன்னாள் ஆளுநா் எம்.கே.நாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT