சென்னை: கீழடியில் உலகத் தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதற்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டிருப்பது உலகத் தமிழா்களுக்குப் பெருமை சோ்த்திருக்கிறது. அரசுக்கு தமாகா சாா்பில் வாழ்த்துகள்.
தமிழ்நாடு நாள் விழா கூட்டத்தில் கீழடியில் ரூ.12.21 கோடியில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது மிகவும் பொருத்தமானது. இது தமிழ் மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்திருக்கிறது.
கீழடி அகழாய்வு பொருள்களைக் காட்சிப்படுத்துவதற்காக அமைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் தமிழா்களின் பண்பாடு, தொன்மை குறித்து உலகத் தமிழா்கள் அறிந்து பெருமை அடைவதற்கு ஏதுவாக அமையும். அது மட்டுமல்ல இந்த அருங்காட்சியகமானது உலகத் தரத்தில் அமைவதால் சுற்றுலாப்பயணிகளை ஈா்க்கும் மிகப்பெரிய சுற்றுலாத் தளமாகவும் அமைந்து தமிழ் மக்களுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சோ்க்கும் என்று அவா் கூறியுள்ளாா்.