தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஐந்து நாள்களாக மழை பெய்து வந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. புதன்கிழமை காலை நிலவரப்படி, நொடிக்கு 800 கன அடியாக தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது. பின்னர் வியாழக்கிழமை காலை நிலவரப்படி, நொடிக்கு 1,300 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்னதாக காவிரி ஆற்றில் பாறைத் திட்டுகள் வெளியே தெரிந்த நிலையில், தற்போது சற்று மூழ்கியும், பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் விழுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.