கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை உருவாக்கப்பட்ட வெள்ளை மயில் மற்றும் நாரினியா உருவம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துள்ளது.
கொடைக்கானலில் தற்போது சீசன் களைகட்டி வரும் நிலையில் வரும் 30-ஆம் தேதி பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்குகிறது. 3 நாள்கள் நடைபெறும் இந்த மலர் கண்காட்சிக்காக பல்வேறு பணகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரையண்ட் பூங்கா பணியாளர்கள் சார்பில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கர்நாடாகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வெள்ளை கொய்மலர்களால் 10 அடி நீளம் 8 அடி உயரம் கொண்ட வெள்ளை மயில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கொடைக்கானல் பூங்காவிலுள்ள அஸ்டோமேரியா, கிங் ஆஸ்டர், சைப்ரஸ், வெள்ளை கொய்மலர் போன்ற மலர்கள், செடிகளால் ஆன மனித உருவம், குதிரை உடல் கொண்ட நாரினியா உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முன் நின்று சுயபடம் எடுத்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளதை முன்னிட்டு பிரையண்ட் பூங்கா அழகுபடுத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு மலர் கண்காட்சியில் கிளி, நந்தி, ஒட்டகச்சிவிங்கி, புகைப்பட பிரேம் உள்ளிட்டவைகளின் உருவ மாதிரிகள்ஆயிரக்கணக்கான மலர்களால் உருவாக்கப்பட உள்ளது.
மேலும் லட்சக்கணக்கான வண்ண வண்ண மலர்கள், 100-க்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளில் வைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ளது என்றார்.