சென்னை: தமிழ்நாட்டில் தேர்தலில் ஓட்டுக்களைப் பெற போராட்டங்கள் நடத்தத் தேவையில்லை; பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றே போதும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த நாடளுமன்றத் தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியானது குறிப்பிடத்தகுந்த வாக்குகளைப் பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் நூலிழையில்தான் இருந்தது.
குறிப்பாக 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து தேர்தல் களத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சிக்கு, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நெருக்கடி என்று கொடுத்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தேர்தலில் ஓட்டுக்களைப் பெற போராட்டங்கள் நடத்தத் தேவையில்லை; பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றே போதும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் புதனன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டு மக்கள் இன்னும் திரை மோகத்திலிருந்து மீளவில்லை. தமிழ்நாட்டில் தேர்தலில் ஓட்டுக்களைப் பெற போராட்டங்கள் நடத்தத் தேவையில்லை; பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றே போதும் என்பதைத்தான், நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.
ராமர் கோயிலைக் கட்டி விட்டால், பாஜகவால் தொடர்ந்து அரசியல் செய்ய முடியாது. அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில், பாஜக அரசு முடிந்தால் ராமர் கோவிலை, கட்டிக் காட்டட்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.