மக்களவைத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து உதகையில் 5 நாள்கள் நடைபெறும் கோடை விழா திங்கள்கிழமை தொடங்கியது.
சுற்றுலாத் துறையின் சார்பில் உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் நடத்தப்படும் கோடை விழா - 2019 கலை நிகழ்ச்சியை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்துப் பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்தக் கோடை விழா நிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவார்கள். அதேபோல, நிகழ் ஆண்டின் கோடை விழா கலை நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை தொடங்கியுள்ளன. இதில், கிளாரிநெட் இசை, பரத நாட்டியம், தப்பாட்டம் ஆகியவற்றுடன் தெலங்கானா, கேரளம், கர்நாடக மாநிலங்களின் கிராமியக் கலை நிகழ்ச்சிகளும், பல்சுவை நடன நிகழ்ச்சிகளும், கரகாட்டம், இன்னிசை நிகழ்ச்சி, வாய்ப் பாட்டு போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மே 31 -ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு நடைபெறுகின்றன. இந்தக் கலை நிகழ்ச்சிகளை சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜனார்த்தனம், அரசுத் துறை அலுவலர்கள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.