மேற்கு மண்டலத்தில் சரிந்தது அதிமுகவின் கோட்டை

அதிமுகவின் கோட்டை என வர்ணிக்கப்படும் அளவுக்கு பொதுத் தேர்தல்களில் இதுவரை துணையாக இருந்து வந்த மேற்கு மண்டலம், தற்போதைய மக்களவைத் தேர்தலில் அக்கட்சியை தலைகுப்புற கவிழ்த்துள்ளது.
மேற்கு மண்டலத்தில் சரிந்தது அதிமுகவின் கோட்டை

அதிமுகவின் கோட்டை என வர்ணிக்கப்படும் அளவுக்கு பொதுத் தேர்தல்களில் இதுவரை துணையாக இருந்து வந்த மேற்கு மண்டலம், தற்போதைய மக்களவைத் தேர்தலில் அக்கட்சியை தலைகுப்புற கவிழ்த்துள்ளது.

தமிழகத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது மேற்குப்புற மாவட்டங்கள் அடங்கிய கொங்கு மண்டலம் ஆகும். இதில் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 8 மக்களவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. கோவையைத் தலைநகராகக் கொண்ட இந்த மேற்கு மண்டலம் தொழில் வளம் மிகுந்தது.

இந்த பகுதிகள் மட்டுமே மாநில அரசின் வருவாயில் சுமார் 40 சதவீதத்தை ஈட்டிக் கொடுக்கின்றன. தமிழக அரசியலின் அசைக்க முடியாத சக்திகளாக இருக்கும் திராவிட இயக்கங்களின் தோற்றுவாயாக இருந்ததுடன், பல்வேறு திருப்புமுனைகளை உருவாக்கியதும் இந்த மண்டலம்தான். 1972-இல் அதிமுக தொடங்கப்பட்ட பிறகு அக்கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆருக்கு பக்க பலமாக இருந்தவர்களும், அக்கட்சி சந்தித்த 1977 பொதுத் தேர்தலில் இருந்து அதிமுக இதுவரையிலும் சந்தித்துள்ள அனைத்துத் தேர்தல்களில் அதிமுகவுக்கு கைகொடுக்கக் கூடியவர்கள் இருக்கும் இடமாகவும் மேற்கு மண்டலம் இருந்து வந்தது.

2006-இல் அதிமுக தோல்வி அடைந்த நிலையிலும் அக்கட்சி சார்பில் தேர்வானவர்களில் அதிகமானவர்கள் (16 பேர்) இந்த மண்டலத்தவர்களே. கடந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. அதேபோல சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளையும், கோவையில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. திருப்பூரில் உள்ள 8 தொகுதிகளில் 6 தொகுதிகளையும், நாமக்கல்லில் உள்ள 6 தொகுதிகளில் 5 தொகுதிகளையும், கரூரில் தேர்தல் நடைபெற்ற மூன்று தொகுதிகளில் இரண்டையும், நீலகிரியில் உள்ள 3 தொகுதிகளில் ஒன்றையும் கைப்பற்றியது.

திமுக, காங்கிரஸ் கூட்டணியானது இந்த மாவட்டங்களில் உள்ள தாராபுரம் (தனி), மடத்துக்குளம், உதகை, கூடலூர், சிங்காநல்லூர், சேலம் வடக்கு, பரமத்தி வேலூர் ஆகிய தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுகவுக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றி வாய்ப்பை வழங்கிய கொங்கு மண்டலத்துக்கு, முதல்வர் ஜெயலலிதா அதிக அளவிலான அமைச்சர்களையும் கொடுத்திருந்தார். இந்த மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமிதான் தற்போது தமிழக முதல்வராகவும் உள்ளார். மேலும், இப்பகுதியைச் சேர்ந்தவர்களே கட்சியில் அதிகாரம் மிக்க அமைச்சர்களாகவும், சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர்களாகவும் உள்ளனர்.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை வென்றது. சில தொகுதிகளில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், பல தொகுதிகளிலும் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்திலும் அதிமுக வென்றிருந்தாலும், கோவையில் அதிமுக வேட்பாளர் பி.நாகராஜன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை வெறும் 42,016 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்கடித்திருந்தார். அதிமுக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதி இதுமட்டும்தான்.

அதிமுகவுக்கு நிகராக பாஜக பலம் வாய்ந்த இடமாகவும் கோவை சுற்றுப் பகுதிகள் இருந்து வந்தன. கடந்த முறை பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜக, தேமுதிக, பாமக கட்சிகளும் இந்த முறை அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்ததால் இந்த கூட்டணி மெகா கூட்டணி என்று அழைக்கப்படும் அளவுக்கு பலம் வாய்ந்ததாக இருந்தது. அத்துடன், கடந்த தேர்தலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அதிமுக, பாஜக, அதன் கூட்டணிக் கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்குகளின் சராசரி 60 சதவீதத்துக்கும் மேல் இருந்தது. இதனால் இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெல்லும் இடங்களில் மேற்கு மண்டலத் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன.

அதேபோல பாஜகவிலும், நிச்சயமாக வெல்லக் கூடிய தொகுதிகளில் ஒன்றாக கோவை தொகுதி பேசப்பட்டு வந்தது. மேற்கு மண்டலம் எப்போதும் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த அதிமுக இந்த முறை கோவை தொகுதியை மட்டும் பாஜகவுக்கு ஒதுக்கிவிட்டு, நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் தொகுதிகளில் தானே போட்டியிட்டது. ஆனால் இந்தத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளையுமே மிகப் பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக இழந்துள்ளது. அதேபோல், நிச்சயம் வெல்லக் கூடிய இடமாகக் கருதப்பட்ட மேற்கு மண்டலத்தின் தலைநகரான கோவையில் பாஜக 1.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

கடந்த தேர்தலில் பலம் வாய்ந்த அதிமுகவை எதிர்த்துப் போட்டியிட்டு 46,025 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றிருந்த சி.பி.ராதாகிருஷ்ணன், இந்த முறை கிட்டத்தட்ட 6 மடங்கு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். இது பாஜகவை மட்டுமின்றி அதிமுகவையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை அமமுக போன்ற கட்சிகள் கூட குறிப்பிடத்தக்க அளவுக்குப் பிரிக்காத நிலையிலும், பொள்ளாச்சி போன்ற நம்பிக்கைக்குரிய தொகுதிகளிலும் பெரிய அளவில் தோல்வியடைந்திருப்பதால், எதிர்க்கட்சிகள் தங்களது பிரசாரத்துக்கு பயன்படுத்திய ஜி.எஸ்.டி. விவகாரம், பொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை விவகாரம் போன்றவை அதிமுக, பாஜகவின் வாக்கு வங்கியை பாதித்திருக்கலாம் என்று கருதவும் இடமுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com