தேனி மக்களவைத் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனும், அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத் குமார் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தேனி மக்களவை தொகுதிக்கு உள்பட்ட ஆண்டிபட்டி,பெரியகுளம் (தனி), போடி, கம்பம், உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தேனி அருகே கம்மவர் சங்கம் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தேனி மக்களவை தொகுதி தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 33 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 23 சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணி இரவு வரை நீடித்தது.
இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் இருந்து அதிமுக, பாஜக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ரவீந்திரநாத் என்பது குறிப்பிடத்தக்கது.