சென்னை: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக இருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாஹு, முன்னேற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது, தமிழகத்தில் மொத்தமுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் நாளை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும். எந்த காரணத்துக்காகவும் வாக்குப்பதிவில் காலதாமதம் ஏற்படாது.
தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் www.eci.gov.in உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் இணையதளங்களில் வெளியிடப்படும். ஒரு சுற்று முடிவு வர 30 நிமிடங்கள் ஆகும்.
பொதுமக்களுக்காக helplineம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 011-23052123 (with 5 hunting lines). இந்த எண்ணில் தொடர்பு கொண்டு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக நிகழும் முறைகேடுகள் குறித்து புகார்களை அளிக்கலாம்.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய moble app அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூகுளின் play storeல் இருந்து voter helpline என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
தலைமைச் செயலகத்திலும் உடனுக்குடன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தல் பார்வையாளர்கள் 88 பேரை தமிழகத்துக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது. இவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை முழுவதும் விடியோ பதிவு செய்யப்படும். வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணிக்காக 36ஆயிரம் காவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
திருவள்ளூர் தொகுதியில் அதிகபட்சமாக 34 சுற்றுகள் எண்ணப்படும். மத்திய சென்னை தொகுதியில் குறைந்தபட்சமாக 19 சுற்றுகள் எண்ணப்படும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட பிறகே ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளும், ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணப்படும் என்று சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்.