அக்னி நட்சத்திரம் நிறைவு பெறுவதை முன்னிட்டு பழனி மலைக்கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், கிரிவலம் வந்தும் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அக்னி நட்சத்திரம் தொடங்கியதை முன்னிட்டு பழனி மலைக்கோயிலில் கைலாசநாதருக்கு சீதகும்பம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சித்திரை மாதம் கடைசி 7 நாள்களும், வைகாசி மாதம் முதல் 7 நாள்களும் பழனி கிரிவீதியில் மூலிகை காற்று வீசுவதாகவும், இதை நுகர்வதால் நோய்கள் நீங்குவதாகவும் ஐதீகம்.
இதனால் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், மேளதாளங்கள் முழங்க காவடி சுமந்து கிரிவலம் வந்து பழனியாண்டவரை தரிசனம் செய்தனர். கடைசி கிரிவல நாளான செவ்வாய்க்கிழமை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து மலை ஏறினர்.
பெண்கள் முருகனுக்கு உகந்த கடம்பை மலரை தலையில் சூடி கிரிவலம் வந்தனர். முன்னதாக திங்கள்கிழமை மாலை நூற்றுக்கணக்கான விவசாயிகள் ரேக்ளா வண்டிகளில் பழனிக்கு வந்து இரவு தங்கி, அதிகாலை மலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து ஊர் திரும்பினர்.