மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கமல்ஹாசன் மீது காவல்நிலையத்தில் இந்து முன்னணியினர் புகார் அளித்ததை அடுத்து தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு ஏற்கெனவே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசு குற்றவியல் வழக்குரைஞர், கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பியே விசாரணை நடத்தப்படும். விசாரணையில் அவரது பதிலில் திருப்தியில்லை எனில் கைது செய்யப்படலாம் எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், நீதிபதி பி. புகழேந்தி திங்கள்கிழமை அளித்த தீர்ப்பில், மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. கமல்ஹாசன் அரவக்குறிச்சி நீதித்துறை நடுவர் மன்றத்தில் 15 நாள்களில் ஆஜராகி, 2 நபர்களின் உத்தரவாதத்துடன் ரூ. 10 ஆயிரம் பிணைத் தொகை செலுத்தி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என குறிப்பிட்டார்.