தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசு உத்தரவை மாநில நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் திங்கள்கிழமை வெளியிட்டார்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை 1-ஆம் தேதி அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி, அடிப்படை ஊதியத்தில் 9 சதவீதம் அகவிலைப்படி உயர்வு பெறும் வகையில் அறிவிப்பு வெளியானது.
விலைவாசி உயர்வைக் கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு எப்போதெல்லாம் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்குகிறதோ, அப்போதெல்லாம் தமிழக அரசும் அகவிலைப்படியை உயர்த்தி அளிக்கும். அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூலையில் மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக அரசும் அறிவிப்பு வெளியிட்டது.
ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படியை மூன்று சதவீதம் உயர்த்தி மத்திய அரசு கடந்த பிப்ரவரி 20-இல் அறிவிப்பு வெளியிட்டது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு காரணமாக, தமிழக அரசு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிடாமல் இருந்தது. நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்திருந்தது. அதன்படி, இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் செயலாளர் க.சண்முகம் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு விவரம்:
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இப்போது 9 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அகவிலைப்படியானது 12 சதவீதமாக உயர்த்தி அளிக்கப்படும். அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதம் அளவுக்கு அகவிலைப்படி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வானது ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அளிக்கப்படும். ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நிலுவைத் தொகைகள் உடனடியாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
வேறு யாருக்கெல்லாம் கிடைக்கும்: உயர்த்தி அளிக்கப்பட்ட அகவிலைப்படியானது, அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாதோர், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுவோர், அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், நூலகர்கள் ஆகியோருக்கும், வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள், மதிய உணவு அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள், எழுத்தர்கள் ஆகியோருக்கு அளிக்கப்படும் என்று தனது உத்தரவில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் அறிவிப்பு மூலமாக 15 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி அளிக்கப்படும். இதன்மூலம் ரூ.300 முதல் ரூ.3000 வரை அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என நிதித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.