தமிழகத்தில் வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு
தமிழகத்தில் வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று முடிந்த பிறகு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சந்தித்தார். அப்போது அவரிடம் தேர்தல் நடத்திய அனுபவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்:
நான்கு சட்டப் பேரவைத் தேர்தலின்போது ஆங்காங்கே சிறிய அளவிலான பிரச்னைகள் ஏற்பட்டன. ஆனால், சட்டம்-ஒழுங்கை பாதிக்கக் கூடிய அளவுக்கு பிரச்னைகள் ஏதும் நடைபெறவில்லை. அரவக்குறிச்சி தொகுதியில் மட்டுமே ஒருசில இடங்களில் சிறிய பிரச்னை உருவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணுவதற்காக ஏற்கெனவே ஊழியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
திங்கள்கிழமை முதல் மீண்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்டத் தேர்தல் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்படும். ஞாயிற்றுக்கிழமை பதிவான வாக்குகள் அடங்கிய இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்படும்.
தமிழகத்தில் அமைதியான முறையில், சுதந்திரமாக நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. தேர்தலின் போது சவால்கள் இருந்தன. இந்தத் தேர்தலில் 4 லட்சம் அதிகாரிகள், அலுவலர்கள் ஈடுபட்டனர். 1 லட்சம் போலீஸார் தேர்தல் பணிக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
தேர்தலில் அரசியல் கட்சியினரும், பொது மக்களும் முக்கியமான பங்குதாரர்களாக உள்ளனர். அரசியல் கட்சியினர் பல்வேறு கேள்விகள் கேட்டனர். அவற்றுக்கு உரிய பதில்களை கொடுத்துள்ளோம் என்றார் சத்யபிரத சாகு.