தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 13 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக, வேலூர், திருத்தணி, கரூர் பரமத்தியில் தலா 108 டிகிரி வெப்பநிலை பதிவானது.
மதுரை தெற்கில் 106 டிகிரி, திருச்சி, மதுரை விமான நிலையத்தில் தலா 105 டிகிரி, சேலம், தஞ்சாவூரில் தலா 104 டிகிரி, பாளையங்கோட்டை, தருமபுரியில் தலா 103 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், நாமக்கலில் தலா 101 டிகிரி, கோவை விமான நிலையத்தில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: தமிழகத்தில் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்தது. திங்கள்கிழமையும் இதே நிலை தொடரும். தமிழகத்தில் சில இடங்களில் அனல் காற்று வீசும். தென் வங்கக் கடலில் சில பகுதிகள், வடக்கு அந்தமான் கடல், அந்தமான் தீவுகள் ஆகிய பகுதிகளில் அடுத்த 2 முதல் 3 நாள்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளது.
மிதமான மழை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (மே 20) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.