திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள்  வழிபாடு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி சனிக்
திருச்செந்தூர் கடலில் சனிக்கிழமை காலையில் புனித நீராட குவிந்த பக்தர்கள்.
திருச்செந்தூர் கடலில் சனிக்கிழமை காலையில் புனித நீராட குவிந்த பக்தர்கள்.


திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி சனிக்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சென்று கடலில் புனித நீராடி சுவாமியை வழிபட்டனர்.

முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாகத் திருவிழா, வசந்த விழாவாக மே  9-ஆம் தேதி தொடங்கி, 10 நாள்கள் நடைபெற்றது.

நாள்தோறும் கோயிலில் உச்சிகால தீபாராதனைக்கு பின்பு, சுவாமி ஜெயந்திநாதர் கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்ந்தார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவம் நடைபெற்றது. இவ்வைபவத்தின்போது ஒவ்வொரு சுற்றிலும் வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ், பிரம்மதாளம், நந்தி மத்தளம், சங்கநாதம், பிள்ளைத்தமிழ், நாகசுரம், வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு, கப்பல் பாட்டு முதலானவை பாடப்பெற்றன. பின்னர், சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோயில் சேர்ந்தார்.

10-ஆம் நாளான சனிக்கிழமை விசாகத்தையொட்டி, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. இதையடுத்து, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்ந்தார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெற்றது. மகா தீபாராதனைக்குப் பின்னர், தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோயிலைச் சேர, விழா நிறைவடைந்தது. 

பக்தர்கள் குவிந்தனர்: இத்திருவிழாவையொட்டி, சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விரதமிருந்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்களால் கோயில் வளாகம் நிரம்பி வழிந்தது. அவர்கள் அதிகாலைமுதலே கடலில் புனித நீராடியதால் கடற்கரையில் கடல்அலைபோல் மக்கள் கூட்டம் காணப்பட்டது. பக்தர்கள் காவடி, அலகு குத்தியும், பால்குடம், அங்கப்
பிரதட்சணம், அடிப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கூட்ட நெரிசலால் ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட இடங்களிலேயே தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபட்டனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் சி. குமரதுரை, கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com