நீடாமங்கலம்: நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயிலில் வியாழக்கிழமை மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.
இக்கோயில், நவகிரகங்களில் குரு பகவானுக்கு பரிகாரத் தலமாக விளங்குகிறது. சிறப்பு மிக்க இக்கோயிலில் வியாழக்கிழமை காலை 9 முதல் 10.30 மணி வரை வருணகுத்த வேத மந்திர பாராயணம் செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, நந்தி பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி நந்தியின் கழுத்துவரை நீர் நிரப்பி வழிபாடு செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். சிவாச்சாரியார்கள் வேத பாராயணங்களைக் கூறி சிறப்பு யாகத்தை நடத்தி வைத்தனர். யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு மே 24-ஆம் தேதி வரை நந்தி பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.