பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் எஸ்.கோபிகிருஷ்ணன் தாக்கல் செய்த பொது நல மனுவில், கோவை மேட்டுப்பாளையத்தில் தனியார் பள்ளி வாகனத்தில் சென்ற 4 வயது குழந்தைக்கு ஓட்டுநரும், உதவியாளரும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
இதே போன்று, தில்லி அருகே நொய்டாவிலும் பள்ளி வாகனத்தில் சென்ற குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இதுபோன்ற கொடூரச் சம்பவங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி வாகனங்களைச் சோதித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இயந்திரங்கள் போலச் செயல்பட்டு சான்றிதழ்களை வழங்கி வருகின்றனர்.
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்ற வகையில் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்த வேண்டும்.
இந்தக் கருவிகளை பள்ளியின் இணையதளத்துடன் இணைத்து பள்ளி வாகனத்தின் செயல்பாடுகளை பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வசதிகளை பள்ளி நிர்வாகங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி தமிழக பள்ளிக் கல்வி துறைச் செயலாளர், போக்குவரத்துத்துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு கடந்த ஏப்ரல் மாதம் மனு அளித்தேன். அந்த மனுவை இதுவரை பரிசீலிக்கவில்லை. எனவே எனது மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.