ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்ணாடி இழைப்படகுகளில் சென்று 4 தீவுகளை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கான சூழல் சுற்றுலாத் திட்டம் ஜூன் மாதம் செயல்படுத்தப்படவுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் உள்ள குருசடை, புள்ளிவாசல், சிங்கிலி, பூமரிச்சான் ஆகிய 4 தீவுகளை நேரில் சென்று பார்க்கும் வகையிலான சூழல் சுற்றுலாத் திட்டத்தை மாவட்ட வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இத்திட்டத்தின்படி 4 தீவுகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இதற்காக புதிதாக 2 கண்ணாடி இழைப் படகுகள் தலா ரூ.10 லட்சம் மதிப்பிலும், ரூ.15 லட்சம் மதிப்பில் பெரிய படகும் வாங்கப்பட்டுள்ளன.
சுற்றுலாத் திட்டத்துக்காக குந்துகால் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பில் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பெரிய படகில் குருசடைத் தீவுக்கு பயணிகள் முதலில் அழைத்துச் செல்லப்படுவர். அதன்பின்னர் 2 சிறிய கண்ணாடி இழைப்படகுகளில் சுற்றுலாப் பயணிகள் மேலும் 3 தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
பெரிய படகில் 20 பேர் வரை பயணிக்கலாம். சுற்றுலா படகில் நபர் ஒருவருக்கு ரூ.300 வரை கட்டணம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கண்ணாடி இழைப் படகின் அடிப்பகுதி மூலம் கடலில் உள்ள பவளப்பாறைகள், ஜெல்லி மீன்கள், நட்சத்திர மீன்கள் மற்றும் கடல் புற்கள் போன்றவற்றை சுற்றுலாப் பயணிகள் பார்க்க முடியும்.
இதுகுறித்து ராமநாதபுரம் வனச்சரகர் சதீஷ் கூறியது: காரங்காடு சுற்றுலாத் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், குருசடை உள்ளிட்ட 4 தீவுகளுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் சூழல் சுற்றுலாத் திட்டம் வரும் ஜூன் மாதம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பொதுமக்களுக்கு கடல், தீவுகள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் அமையும் என்றார்.