நாட்டில் 50 ஆண்டு காலத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை விளாச்சேரியில் பிரசாரம் செய்து அவர் பேசியதாவது:
நடிகர் என்பதால் என்னை பார்க்க மக்கள் வருகிறார்கள் என கூறுகிறார்கள். இந்த கடுமையான வெயிலில் மக்கள் என்னை ஏன் பார்க்க வரவேண்டும். மாறாக திரையரங்குகளில் சென்று பார்த்தால் பேசவும் செய்வேன், ஆடவும் செய்வேன். நான் யார் சொல்லியும் ஆடமாட்டேன். மக்களுக்காக சேவை செய்ய வந்துள்ளேன்.
கடந்த 50 ஆண்டுகாலத்தில் நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை. இது மன வருத்தத்தை அளித்தது. நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே கட்சி தொடங்கினேன். நாட்டை மாற்றி அமைக்க மக்கள் நீதி மய்யம் மட்டும் நினைத்தால் முடியாது.
மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை உயர்த்த சபதம் ஏற்கவேண்டும். கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களை கண்டுகொள்ளாமல் ஒதுக்கி விட்டு தற்போது தேர்தல் என்றவுடன் பணம் கொடுக்கின்றனர்.
இதை மக்கள் ஏற்காமல் அவர்களை கேள்விக் கேட்க வேண்டும். நல்ல தலைமை இருந்தால் தான் நாட்டின் நிலை உயரும். ஊழல் செய்தவர்கள் ஊடகங்கள் முன்பு தைரியமாக நல்லவர்கள் போன்று நடித்து பேசுகிறார்கள். இதை பார்க்கும் மக்கள் அதை நம்புகிறார்கள். நான் அவர்களை விட நல்ல நடிகன்.தமிழகத்தில் எங்கு சென்றாலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலை மாறவேண்டும் என்றார்.