குமரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
குமரி மாவட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் கடும் வெயிலும், வெப்பமும் நிலவியதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். குடிநீர் ஆதாரங்கள் வறண்டதால், மக்கள் குடிநீருக்கு அவதிப்படும் சூழல் ஏற்பட்டது. கடற்கரை கிராமங்களில் கடல்நீர் உள்புகுந்து குடிநீர் உப்புத்தன்மை கொண்டதாக மாறியதால், பெருஞ்சாணி அணையிலிருந்து தாமிரவருணி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. திற்பரப்பு அருவி தண்ணீரின்றி வறண்டதால், சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், அணைப் பகுதிகளிலும், மலையோரப் பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை, கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணித்து வருகிறது.
நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆறுகளிலும் வெள்ளம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, திங்கள்கிழமை பிற்பகல் மலைப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக கோதையாறு மற்றும் பரளியாற்றில் வெள்ளம் கணிசமாக அதிகரித்தது. இதில், திற்பரப்பு அருவி வழியாகப் பாயும் கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால், திற்பரப்பு அருவியில் நீர்வரத்து பெருமளவில் அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இந்த அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.