நீலகிரி மாவட்டம், குன்னூருக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் இங்குள்ள தங்கும் விடுதிகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
நீலகிரியில் உள்ள குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு மே மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகக் காணப்படும்.
குறிப்பாக தமிழகம், கேரளம், கர்நாடகம், வட மாநிலங்களிலிருந்து அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர்.
இந்நிலையில், இங்குள்ள தங்கும் விடுதிகளில் கடந்த வாரம் முதலே முன்பதிவு தொடங்கிவிட்டது.
இதனால் லாட்ஜ், காட்டேஜ் ஆகியவற்றின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் இவற்றின் முன்பதிவு முடிந்துவிட்டது. சாதாரண லாட்ஜ்கள் முதல் நட்சத்திர ஹோட்டல்கள் வரை எதிலும் அறைகள் காலி இல்லை.
மே 1-ஆம் தேதி சாதாரணமாக ரூ.800 கட்டணமாக உள்ள லாட்ஜ்களில் ரூ. 1,500 வரை கொடுத்தால் மட்டுமே அறைகள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல கெஸ்ட் ஹவுஸ்களில் ரூ. 2 ஆயிரமாக இருந்த கட்டணம் ரூ. 3,500 வரை வசூலிக்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் குழு அமைத்து இதனைக் கண்காணிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.