உதகையில் கோடை சீசனையொட்டி சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில் உதகை கோடை விழா அரசினர் தாவரவியல் பூங்காவில் புதன்கிழமை (மே 1) தொடங்குகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்ததாவது:
நீலகிரி கோடை விழாவின் தொடக்கமாகவும், சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையிலும் புதன்கிழமை (மே 1) காலை 11 மணிக்கு உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் பரத நாட்டியம், பழங்குடியினரின் கலாசார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத் துறை சார்பில் மே 17 ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் மலர்க்காட்சியும், மே 25, 26 ஆம் தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சியும் நடத்தப்படவுள்ளது. மலர்க்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கவுள்ளார்.
உதகை அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 4 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். இது கடந்த
ஆண்டைக் காட்டிலும் 25 சதவீதம் அதிகமாகும் என்றார்.