சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. கூட்டணியில் அக்கட்சிக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. மிகுந்த தாமதத்திற்குப் பிறகு 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதில் திருவள்ளூர் தனி தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் செயல் தலைவர்களில் ஒருவரான ஜெயக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஜெயக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மையினர் பிரிவு செயலாளாராக இருப்பவர் செல்வப்பெருந்தகை. இவருக்கு திருவள்ளூர் தொகுதி வழங்கப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் அதற்கு மாறாக ஜெயக்குமாருக்கு தொகுதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே சனிக்கிழமை மாலையில் இருந்தே அவரதுஆதர்வாளர்கள் மாநில காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் எதிர்ப்புக் குரல் எழுப்பி வந்தனர். அதன் தொடர்ச்சியாக ஞாயிறு காலை செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர்கள் சிலர் அலுவலக வாயிலில் நின்று, கையில் வைத்திருந்த கேனிலிருந்து பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயன்றனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களைக் காப்பாற்றினர்.
போராட்டம் செய்தவர்கள் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் அழகிரியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்