காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை அகற்றப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்குமாறு மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரைச் சேர்ந்தவர் கோபிநாத். இவரது மனைவி அகஸ்தியா (26). கர்ப்பமாக இருந்தார் இவர், பிரசவத்துக்காக கடந்த 3-ஆம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்த சில மணி நேரங்களில் அக்குழந்தை இறந்தது. அகஸ்தியாவின் உடல்நிலை கருதி அவரது கர்ப்பப்பை அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சில நாள்களில் அகஸ்தியா உயிரிழந்தார்.
தாமாக முன்வந்து வழக்கு: இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தார். மேலும், இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஆகியோர் 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.