இன்றைக்கும் மகளிர் முன்னேற்றத்தில் மகத்தான பங்கு வகிக்கிறது திமுக: ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து     

இன்றைக்கும் மகளிர் முன்னேற்றத்தில் திமுக மகத்தான பங்கு வகிக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து கூறியுள்ளார்.
இன்றைக்கும் மகளிர் முன்னேற்றத்தில் மகத்தான பங்கு வகிக்கிறது திமுக: ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து     

சென்னை: இன்றைக்கும் மகளிர் முன்னேற்றத்தில் திமுக மகத்தான பங்கு வகிக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சர்வதேச மகளிர் தினத்தில், இதயபூர்வமான என் வாழ்த்துகளை, உலக மகளிர்க்கு உரித்தாக்குகிறேன். “அனைவரும் சமம் என எண்ணுக, நேர்த்தியான கட்டமைப்பைச் செய்க, மாற்றத்திற்கான புதிய பாதையைக் காணுக (Think Equal, Build Smart, innovate for Change)” என்ற உயர்ந்த நோக்கங்களை 2019 - சர்வதேச மகளிர் தின இலக்காக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருப்பது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.

எங்கும் எழுச்சியுடனும் ஏற்றத்துடனும் கொண்டாடப்படும் மகளிர் தினத்தில்; சமுதாயத்திலும் தனி மனித வாழ்க்கையிலும் மகளிர் தம் மாண்பினையும் மதிப்பினையும் மகத்துவத்தினையும் முக்கியத்துவத்தினையும் முன்னுரிமையினையும் தொடர்ந்து போற்றி வருவது திராவிட இயக்கம் என்பதையொட்டி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பெண்களின் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார அதிகாரம் உள்ளிட்ட பல முன்னோடி இலக்குகளை எய்துவதற்காக நிறைவேற்றப்பட்ட சில முக்கிய திட்டங்களை மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.

ஆரம்பப் பள்ளிகளில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளில் மகளிர் மட்டுமே ஆசிரியைகளாக நியமனம் செய்ததும், தமிழகத்தின் உயர் காவல்துறை பதவியான டி.ஜி.பி பொறுப்பில் ஒரு பெண் அதிகாரியை நியமித்ததும் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான கழக அரசுதான்! ஏழை எளிய, நடுத்தரக் குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு திருமண நிதியுதவித் திட்டத்தை அறிவித்து, அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க மகளிர் சுய உதவிக்குழுக்களை அறிவித்ததும் கழக அரசு தான். பெண்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதோடு மட்டுமின்றி – உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடும் அளித்து அரசு நிர்வாகத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கு வாய்ப்பு வழங்க நடவடிக்கைகளை எடுத்த அரசு கழக அரசு. “பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை” என்ற உன்னத சட்டத்தை உருவாக்கி - பெண்களுக்கு சம உரிமை வழங்குவதில், தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைக்கு வடிவம் கொடுத்து, இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. பெண்களுக்கு சம உரிமை, சம அதிகாரம், சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இப்படி நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற திட்டங்கள் இன்றைக்கும் மகளிர் முன்னேற்றத்தில் மகத்தான பங்கு வகிக்கிறது.

ஆனாலும் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்ற தலைவர் அவர்களின் கனவு, ஏறக்குறைய 23 வருடங்களாக நிறைவேறாமல் இருப்பது, நெஞ்சத்தைக் கவலை கொள்ள வைக்கிறது. “மகளிர் இட ஒதுக்கீடு வழங்குவோம்” என்று தேர்தல் வாக்குறுதி அளித்து மகளிர் வாக்குகளையும் பெற்று ஆட்சிக்கு வந்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த ஐந்து வருடங்களில் - 2010ல் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு ஒன்பது வருடமாக நிலுவையில் உள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற, ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை என்பது பெண்களுக்குப் பெருத்த ஏமாற்றமாக அமைந்து விட்டது; வெறுப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பா.ஜ.க வின் ஒற்றைக் கலாச்சாரத்தில் பெண்களுக்கான இடம் அவ்வளவுதான்! இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் இதோ வருகிறது. இந்தத் தேர்தல் மூலம் மக்கள் - குறிப்பாக மகளிர் அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு - கழக ஆதரவுடன் அந்த அரசு மத்தியில் அமைந்தவுடன், மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்படும் - அதற்கான அனைத்து முயற்சிகளையும் திராவிட முன்னேற்றக் கழகம் தீவிரமாக மேற்கொள்ளும் என்று - சர்வதேச மகளிர் தினத்தில் உறுதி செய்து, சபதம் ஏற்கிறேன்!

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com