புதிய கல்விக் கொள்கையைத் திணிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் வலியுறுத்தினார்.
விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக மக்கள் மீது அக்கறையில்லாத அரசை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், மக்கள் மாற்றுவார்கள். திமுக தலைமையில் நல்லாட்சி வரும்.
மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டு ஜூலைக்குள் கருத்துச் சொல்ல கோரியுள்ளது. இன்றைய கல்வி முறையில் என்ன குற்றம், குறைபாடு என்பதை அவர்கள் சொல்லவில்லை. கல்வியாளர்கள், மேதைகள் சொன்னதை ஏற்காமல், புதிய கற்பனையைத் திணித்துள்ளனர். நீட் தேர்வு ரத்து தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை செயல்படுத்த வேண்டும். மாநில மக்களின் உணர்வை மதிக்க வேண்டும். இதற்காக, திமுக கூட்டணி எம்பிக்கள் போராடுவர் என்றார்.
பேட்டியின்போது மாநில துணைத் தலைவர் ஷபிகுர்ரகுமான், மாவட்ட நிர்வாகிகள் வி.ஆர்.முகமதுஇப்ராகிம், எஸ்.எம்.அமீர்அப்பாஸ், ஷாகுல் அமீது, மதரஸா ஆசிரியர் ஷாகுல்அமீது, சகாயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.